வேலூர் கோட்டையை திமுக வென்றுள்ளது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கோட்டை விட்டார் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலின்போது, தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,553 வாக்குச்சாவடிகளில், தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் இந்தத் தொகுதியைச் சேர்ந்த 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகளும், 1,026 போலீஸாருக்கு தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வந்தன.
நொடிக்கு.. நொடி மாறும் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தால் வேட்பாளர்கள் முதல் கட்சிகளின் தொடர்கள் வரை பரபரப்பும், ஏமாற்றங்களும் மாறி மாறி காணப்பட்டு வந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4 லட்சத்து 76 ஆயிரத்து 855 வாக்குகள் பெற்று 8 ஆயிரத்து 460 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மக்களவையில் திமுகவின் பலம் 24 ஆக அதிகரித்துள்ளது.