எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய தமிழக மீனவர்கள் 6 பேர் நேற்று வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் அனைவரும் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்படித்ததாக கூறி இந்திய தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தனர். அத்துடன் அவர்களின் 1 விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.