திருமணமான ஒரு மணி நேரத்தில் வரதட்சணையாக கார் கேட்டு முத்தலாக் கூறியவர் மீது வழக்குப்பதிவு 

திருமணமான ஒரு மணி நேரத்தில் வரதட்சணையாக கார் கேட்டு "முத்தலாக்" கூறியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணமான ஒரு மணி நேரத்தில் வரதட்சணையாக கார் கேட்டு முத்தலாக் கூறியவர் மீது வழக்குப்பதிவு 

ஆக்ரா: திருமணமான ஒரு மணி நேரத்தில் வரதட்சணையாக கார் கேட்டு "முத்தலாக்" கூறியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நதீம் என்ற பப்பனுக்கும் (27) ஆக்ராவின் ஹரிபர்வத் பகுதியை சேர்ந்த ரூபி (26) என்ற பெண்ணிற்கும் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) இரவு திருமணம் நடைபெற்றது. 
திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் மணமகன் நதீம் கார் வேண்டும் என கேட்டுள்ள நிலையில், திருமணம் முடிந்ததும் கார் கிடைக்காததால் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் மவுலவி முன்னிலையில் 'குபூல் ஹை' என்று மூன்று முறை "தலாக்" கூறி மனைவியான ரூபியை விவாகரத்து செய்துள்ளார். அப்போது தங்களின் பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு பெண் வீட்டார் மன்றாடியும் மணமகன் மனம் இறங்கவில்லை. 

இதுகுறித்து பெண்ணின் சகோதரர் அமீர் கூறியதாவது: திருமணத்திற்கு மணமகன் வீட்டாருக்கு நாங்கள் காரை வழங்கத் தவறியதால் என் சகோதரியை தனது மனைவியாக ஏற்றுக்கொண்டதற்கு ஒரு மணி நேரத்திற்குள் தலாக் கூறினார். இதையடுத்து மணமகன் வீட்டாரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, "அவரது குடும்ப உறுப்பினர்கள் எங்களை அவமதித்ததோடு மட்டுமல்லாமல், ​​எங்கள் மீது கற்களை வீசினர், அதன் பிறகு நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் என அமீர் கூறினார்.

இதனையடுத்து மணமகளின் தாய் ஃபரிஷா பேகம் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில், மணமகன் நதீம் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீஸார் வரதட்சணை கொடுமை மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 (ஏ) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

இதுகுறித்து ஹரிபர்வத் காவல் நிலைய அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில், "இந்த வழக்கு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம், விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் அவரது உறவினர்களையும் கைது செய்வோம்" என்று தெரிவித்தார்.

மணமகன் நதீம் ஷூ ஷோரூம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். மணமகள் ரூபி பல் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். 7 பேருடன் பிறந்த ரூபி, வீட்டில் 3 வது பிள்ளை.

முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்குத் தடை மற்றும் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஜூலை 25 ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 30 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு சட்டமாக நிறைவேற்றிய சில நாட்களிலேயே முத்தலாக் கூறி பெண்ணை விவாகரத்து செய்வது தொடர்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com