அருண் ஜேட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி (66), உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தில்லி
அருண் ஜேட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்


புதுதில்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி (66), உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி (66), உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜேட்லியின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜேட்லி உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஜேட்லியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

பாஜகவின் முந்தைய ஆட்சியில் மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறையை கவனித்து வந்த ஜேட்லி, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக திகழ்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் ஜேட்லி பாதிக்கப்பட்டுள்ளார்.

சர்க்கரை நோய் காரணமாக, கடந்த 2014-ஆம் ஆண்டு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டார். அதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ஜேட்லி, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். 

அப்போது, இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சரியான பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக அடிக்கடி அவர் அமெரிக்கா சென்று வந்தார். 

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்கூட ஜேட்லி போட்டியிடவில்லை. 
மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியமைத்த போது, உடல்நலக் குறைவு காரணமாக எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள இயலாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அளித்திருந்தார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு அருண் ஜேட்லியின் உடல் நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com