காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 48 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழா தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து, அத்திவரதர் காட்சி தந்த வசந்த மண்டபம் மூடப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆக.17 -ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 47 -ஆவது நாளான வெள்ளிக்கிழமை பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார்.
சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.
48 -ஆவது நாளான இன்று சனிக்கிழமை காலையில் பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் நிறைவு பெற்று, மாலையில் ஆகம விதிகள் நிறைவடைந்த பிறகு அனந்தசரஸ் திருக்குளத்தில் மீண்டும் எழுந்தருளுகிறார் அத்திவரதர்.
48 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழா தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து, அத்திவரதர் காட்சி தந்த வசந்த மண்டபம் மூடப்பட்டது.
அத்திவரததை இனி 40 ஆண்டுகளுக்குப் பிறகே தரிசிக்க முடியும்.
கடந்த 47 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் தரிசனத்தில் சுமார் ஒரு கோடியே 7,500 பேர் தரிசனம் செய்துள்ளனர். கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.7 கோடி பெறப்பட்டுள்ளது.