ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி

உண்மைகள் கோழைகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே அவரை வேட்டையாட துடிப்பது வெட்கக் கேடானது. நாங்கள் சிதம்பரத்திற்காக துணை நிற்போம்..
ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி


புதுதில்லி : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு என்றும் சிதம்பரத்திற்கு காங்கிரஸ் என்றும் துணை நிற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

மேலும், இந்த முறைகேட்டில் முக்கிய சதிகாரராக ப.சிதம்பரம் செயல்பட்டிருப்பது, வெளிப்படையாக தெரியவருகிறது; அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளுக்கு இதுவரை இருந்து வந்த தடை நீங்கியுள்ளது.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றனர். அப்போது, அவர் வீட்டில் இல்லை. இதனை உறுதி செய்துகொண்ட அதிகாரிகள், மீண்டும் சிபிஐ அலுவலகத்துக்கு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர், அவரது வீட்டுக்கு மீண்டும் வந்த அதிகாரிகள், சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி முன்பாக 2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற அறிவுறுத்தல் அடங்கிய நோட்டீஸை ஒட்டிவிட்டு சென்றனர். இதே நோட்டீஸ், ப.சிதம்பரத்தின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

இதுவரை சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தேடி வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் தில்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முயற்சித்து வருவகின்றனர். அதீத தகுதியுடைய, மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினரான சிதம்பரம், நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர். எந்த வித அச்சமும் இன்றி பாஜக அரசின் தோல்விகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தி வருகிறார்.

ஆனால் அவர் கூறிவரும் உண்மைகள் கோழைகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே அவரை வேட்டையாட துடிப்பது வெட்கக் கேடானது. நாங்கள் சிதம்பரத்திற்காக துணை நிற்போம். உண்மைக்காக தொடர்ந்து போராடுவோம். சிதம்பரத்தை ஆதரிப்பதற்காக அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். சத்தியத்திற்காக தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com