புதுதில்லி: அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பேரழிவில் இழந்த அல்லது சேதமடைந்த ஆவணங்களை மீண்டும் ஒரே இடத்தில் அனைத்தையும் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கோரியுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதம் எழுதியுள்ளார். அதில், வெள்ளம் பாதித்த எனது தொகுதியில் வசிக்கும் மக்கள், குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள், பள்ளி கல்வி சான்றிதழ்கள், நிலப்பதிவு ஆவணங்கள், பட்டாக்கள், திருமண பதிவு சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், வரி செலுத்தியதற்கான ரசீதுகள், பான் அட்டை போன்ற உள்ளிட்ட அத்தியவாசியமான ஆவணங்களை இழந்துள்ளனர்.
இழந்த அல்லது சேதமடைந்த ஆவணங்களை மீண்டும் பெறுவதற்காக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பல அலுவலகங்களை செல்வதற்கு பதில், ஒரே இடத்தில் அனைத்தையும் மீண்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களுக்கு மாநில அரசு தேவையான உதவிகளை செய்யும் என நம்புகிறேன் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.