தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வை 40 ஆயிரம் பெண்கள், 20 திருநங்கைகள் உள்பட 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழக காவல்துறையின் ஆயுதப்படையில் உள்ள 2465, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் உள்ள 5963 ஆகிய இரண்டாம் நிலைக் காவலர்கள் பணியிடங்கள், தீயணைப்புத்துறையில் 191 தீயணைப்போர் பணியிடம், சிறைத்துறையில் உள்ள 208 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடம் என மொத்தம் 8,826 பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 228 மையங்களில் 40 ஆயிரம் பெண்களும், 20 திருநங்கைகள் உட்பட 3.22 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி 11.20 மணி வரை நடைபெற்றது. தேர்வு எழுதும் இளைஞர்களின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தத்தனூர் தேர்வு மையத்தில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவ்பிரகாஷ் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதியதாக ரகுபதி என்பவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.