தூத்துக்குடி: தொடர் மழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் செவ்வாய்க்கிழமையும், நாளை புதன்கிழமையும் (டிச.3,4) மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழைக் காலங்களில் மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்துக்கு ஏற்ற வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தொடர் மழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஏதேனும் ஒரு வார விடுமுறை நாளில் பள்ளிகள் செயல்படும் என்றும் அதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.