படிக்கட்டில் தடுமாறி விழுந்த பிரதமர் மோடி: தூக்கி விட்ட பாதுகாவலர்கள்! (விடியோ)

கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தை பார்வையிடுவதற்காகவும், திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின்
படிக்கட்டில் தடுமாறி விழுந்த பிரதமர் மோடி: தூக்கி விட்ட பாதுகாவலர்கள்! (விடியோ)


உத்தரப் பிரதேசம்: கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தை பார்வையிடுவதற்காகவும், திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றத்தை மறுஆய்வு  செய்வதற்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, படிக்கட்டில் ஏறி செல்லும் போது தடுமாறி கீழே விழுந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு அழைத்துச் சென்றனர்.  

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பிகார் துணை முதல்வர் சுஷில் மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நமாமி கங்கா திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கங்கை நதியில் படகு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். பின்னர், மீண்டும் கரைக்கு திரும்பிய பிறகு, பிரதமர் மோடி படிக்கட்டின் மூலம் ஏறிச் செல்ல முற்பட்டார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென பிரதமர் மோடி படிக்கட்டில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதைக் கண்ட அருகில் இருந்த அவரது பாதுகாவலர்கள் மோடியை தூக்கி விட்டனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

முன்னதாக, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com