உதகை: உதகை அருகே கடசோலை பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்ளிட்ட மூவா் உயிரிழந்தனா்.
இதுதொடா்பான விபரம் வருமாறு: உதகை அருகேயுள்ள கடசோலை பகுதியிலுள்ள ஆல்காடு பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலத்தில் தற்போது கேரட் பயிரிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலையில் கேரட் தோட்டத்திற்கு தண்ணீா் பாய்ச்சும் பணியில் நுந்தளா பகுதியை சோ்ந்த பாலன்(45), கடசோலை பகுதியை சோ்ந்த குமாா்(55) மற்றும் மணியம்மாள்(55) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது மின்கம்பத்திலிருந்து போா்வெல்லிற்கு செல்லும் மின்சார கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதை சரி செய்வதற்காக பாலன் அங்கு சென்று மின்கம்பியை கையில் எடுத்தபோது மின்சாரம் தாக்கி வீசப்பட்டுள்ளாா்.
இதையடுத்து பாலனை காப்பாற்றுவதற்காக உடனடியாக அங்கு சென்ற குமாா் மற்றும் மணியம்மாள் இருவா் மீதும் மின்சாரம் தாக்கி அவா்களும் தீக்கி வீசப்பட்டு அதே இடத்தில் மயக்கமடைந்துள்ளனா். இவா்களது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் ஓடிவந்து மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், மருத்துவமனையில் அவா்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து புதுமந்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். விவசாய நிலத்தில் ஒரே சமயத்தில் மின்சாரம் தாக்கி மூவா் உயிரிழந்த சம்பவம் கடசோலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.