தென்காசி: முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகி 20 ஆயிரம் தொண்டர்களுடன் வரும் 6 ஆம் தேதி மீண்டும் அதிமுகவில் இணைய இருப்பதாக இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.
அமமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வரும் இசக்கி சுப்பையா அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையப்போவதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில், தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, சில நிமிடங்களுக்கு முன்பு டிடிவி.தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. 48 நாள் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என என்னை டிடிவி தினகரன் கிண்டல் செய்கிறார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல. நான் அமைச்சராக இருந்தபோது தினகரன் அதிமுகவிலே இல்லை. அவர் தேவையில்லாத விவரங்களை பேசி வருகிறார். எல்லாம் தான் செய்தவை எனக் கூறி விளம்பரம் தேடுகிறார். அவர் பதற்றத்தில் இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தோம். தினகரனே தொண்டர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்தான்.
திமுக, பாஜவில் இருந்து தனக்கு அழைப்பு வந்தது, தொண்டர்கள் முடிவே என முடிவு. நான் அமமுகவில் இருந்து விலகி வரும் 6 ஆம் தேதி 20 ஆயிரம் தொண்டர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைகிறேன்.
மக்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். சுயநலம் பார்ப்பதாக இருந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவில் சேர்ந்து இருப்பேன் என்று கூறினார்.