மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்று இன்று மாலை 6 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குளானது. இதில் கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 9 பேர் சிக்கியுள்ளதாகவும், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காசிநாதன்(35) என்பவர் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்களில் கார்த்திக் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளில் சிக்கி உள்ள 3 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி பெற்ற நிலையில் 3 தளங்கள் கட்டியதாக கட்டட உரிமையாளர் மாதவன் கைது செய்யப்பட்டுள்ளார். செக்கானூரணி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.