சத்தீஸ்கா்: கடந்த ஏப்ரல் மாதம் சத்தீஸ்கரில் பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி, 4 போலீஸார் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி பாதுகாப்புப் படையினரால் இன்று வெள்ளிக்கிழமை(ஜூலை 12) சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி, 4 போலீஸார் உயிரிழக்க காரணமான நக்ஸல் தீவிரவாதி ஹூராவை போலீஸார் தேடி வந்தனர். இவரை காண்போர் தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் அறிவித்தும், இவரை போலீஸார் தேடி வந்த நிலையில், சுக்மா மாவட்டத்தின் மிஸ்ஸி தாபா வனப்பகுதியை பாதுகாப்புப் படையினா் இன்று வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு நக்ஸல் தீவிரவாதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதி, பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி, 4 போலீஸார் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி ஹூரா என்பது தெரியவந்துள்ளது.