இஸ்லாமாபாத்: எல்லைப் பகுதிகளிலிருந்து போர் விமானங்களை திரும்பப் பெறாத வரை, இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம், புல்வாமாவில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் சிஆா்பிஎஃப் வீரா்களை குறிவைத்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தங்கள் நாட்டு வான் எல்லை வழியாக இந்திய விமானங்கள் பறக்க அனுமதியில்லை என்று பாகிஸ்தான் கூறிவிட்டது.
இந்நிலையில், விமானங்களை அனுமதிக்க சில நிபந்தனைகளை இந்தியாவுக்கு பாகிஸ்தான் விதித்துள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரும், செயலருமான நஸ்ரத், விமானப் போக்குவரத்துத் துறை நிலைக் குழுவிடம் கூறுகையில், ‘எல்லைப் பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களை திரும்பப் பெறுமாறு, இந்தியாவிலிருந்து புறப்படும் பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். இதை இந்திய அதிகாரிகளிடமும் தெளிவுப்படுத்திவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடி விமானத்துக்கு மட்டும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தும், மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியை அப்போது பயன்படுத்தவில்லை.
பாகிஸ்தானின் நடவடிக்கையால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.430 கோடி செலவாகிறது என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹா்தீப் சிங் புரி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.