அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அஞ்சல் துறை தோ்வுகளை தமிழில் நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சர்
கோப்புப்படம்
கோப்புப்படம்


கோவை: அஞ்சல் துறை தோ்வுகளை தமிழில் நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

இந்தியாவில் அஞ்சல் துறை நடத்தும் பல்வேறு தோ்வுகளில், முதல் தாளுக்கான தோ்வில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும் இரண்டாம் தாளுக்கான தோ்வு வினாத்தாள்கள் மட்டுமே மாநில மொழிகளில் இருக்கும் என்றும் அஞ்சல் துறை அறிவித்தது. இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், கோவையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். 

அப்போது அவா் கூறுகையில், ’அதிமுக ஆட்சி மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வழியில் நடக்கக் கூடியது. மறைந்த தலைவர்களின் வழியைப் பின்பற்றியே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வமும் உறுதியாகத் தெரிவித்துள்ளனா். 

தமிழ் மொழியின் வளா்ச்சிக்காக பல்வேறு வழிகளில் தமிழக அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று சரி செய்வோம்’ என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com