சென்னை: அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான எழுத்துத் தேர்வுகளில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது இந்தி பேசாத மாநிலத்தவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்படும் என தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்க பதிவில், அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அஞ்சல் துறை வேலை வாய்ப்பிற்காக முயற்சிப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இது அமைந்து விடும். எனவே இந்திய அஞ்சல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும்.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.