சென்னை: அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.
தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்.
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.