பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டதை பாஜக தலைவர் எடியூரப்பா வரவேற்றுள்ளார்.
2018-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் மஜதவும் காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கிவைக்கும் நோக்கத்தில், மஜதவும் காங்கிரசும் தோ்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தன. பொது எதிரியான பாஜகவுக்கு எதிராக மஜதவும் காங்கிரசும் கூட்டணி அமைத்ததுபோல, அந்த இரு கட்சிகளுக்கு இடையே காணப்பட்டு வந்த முரண்பாடுகளோடும் கூட்டணி அமைத்துக்கொண்டதே தற்போது 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளதற்கு காரணமாக அமைந்துவிட்டது.
இதையடுத்து கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் தனது அரசு வெற்றி பெறும் என முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்கும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் குமாரசாமியின் முடிவை வரவேற்றுள்ள பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரவையில் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரியிருக்கிறார். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். கூட்டணி அரசை காப்பாற்றுவதில் அவர் வெற்றி பெற மாட்டார். திங்கள் வரை காத்திருப்போம் என்று கூறினார்.