குல்பூஷன் ஜாதவ் தீர்ப்பு விவகாரம்: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை

இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மறுஆய்வு
குல்பூஷன் ஜாதவ் தீர்ப்பு விவகாரம்: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை


புதுதில்லி: இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார். 

ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக, குல்பூஷண் ஜாதவை கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கில், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது. ஈரானிலிருந்த குல்பூஷண் ஜாதவை கடத்திச் சென்று பாகிஸ்தான் கைது செய்ததாக இந்தியா குற்றஞ்சாட்டியது. 

இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. 

பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் 4 நாள்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது, இருநாடுகளும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. 

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பைக் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அப்துல்லாவி அகமது யூசுப் தலைமையிலான 16 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. அப்போது, பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவை நேரில் சந்திக்கவும், அவருக்கான வாதங்களை முன்வைக்க வழக்குரைஞரை நியமிக்கவும் இந்திய அதிகாரிகள் அனுமதி கோரினர். 

ஆனால், பாகிஸ்தான் அரசு அந்தக் கோரிக்கைகளை மறுத்துவிட்டது. இதன்மூலம், கைது செய்யப்பட்டவருக்கு அளிக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளை மறுத்து, சர்வதேச ஒப்பந்தங்களை பாகிஸ்தான் அரசு மீறியுள்ளது.

குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீவிரமாக மறுஆய்வு செய்ய வேண்டும். அதுவரை ஜாதவுக்கான தண்டனையை பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும். அதே வேளையில், ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்து, உடனடியாக அவரை விடுதலை செய்யக் கோரிய இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஜாதவின் மரண தண்டனையை மறுஆய்வு செய்ய 15 நீதிபதிகள் ஆதரவளித்தனர். 

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com