பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்ச
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி


புதுதில்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சம்பந்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அந்த பெண்ணின் தந்தையை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது சிறையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார். 

தற்போது அந்த பெண் ரே பரேலி சிறையில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞருடன் ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த அவரது உறவினர்களான ஷீலா (50), புஷ்பா (45) ஆகிய இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், இது விபத்து அல்ல. எங்கள் அனைவரையும் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி என்று கூறினார். வழக்கு தொடர்பான விசாரணையின்போது நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றி அளிக்குமாறு எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தரப்பிலிருந்து அடிக்கடி மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் பெண்ணின் மாமாவான மகேஷ் சிங் கூறினார்.

இந்த நிலையில் அந்த பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக உத்தரப் பிரதேச காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே இந்த கார் விபத்து விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை கடிதத்தை உள்துறை முதன்மைச் செயலரிடம் உத்தரப் பிரதேச அரசு அளித்தது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், அந்த பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரத்தில் குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் அடையாளம் தெரியாத 20 நபர்கள் மீது கூட்டு சதி, கொலை, மிரட்டுதல் மற்றும் கொலைமுயற்சி உட்பட பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக கடந்த 12 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அந்த பெண் மீதும் குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அத்துடன் எங்களை எம்எல்ஏ ஆட்கள் மிரட்டி வருவதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் குடும்பத்தார் எழுதிய கடிதம் என் பார்வைக்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுதொடர்பாக ஒருவாரத்திற்குள் விரிவான பதிலளிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணை நாளை வருவதற்குள் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் மற்றும் வழக்குரைஞரின் உடல்நிலை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com