நல்லொழுக்கம் பாதிக்காத வகையில் அரசு அலுவலர்கள் நேர்த்தியான, சுத்தமான ஆடைகளை அணிந்து வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு ஊழியர்கள் வேஷ்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலை போன்ற நேர்த்தியான, சுத்தமான ஆடைகளாகவும், அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வரலாம்.
டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர்கள், ஃபார்மல் வகையிலான பேன்ட், சட்டைகளையே அணிதல் வேண்டும் என்றும், அலுவல் ரீதியாக நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் தங்களின் ஆடை நிறம் மற்றும் ஆடையின் வடிவமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். முழுக்கையுடன் கூடிய கோட், திறந்த வகையிலான கோட்டை அணிய விரும்பினால் 'டை' கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து வரலாம் என்றும், கூடுமான வகையில், அடர்வண்ணங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.