பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்த நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது.
அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக அலுவலகம் வெளியே முதல்வர் பழனிசாமியே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பில்லை. அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என 3 எம்.எல்.ஏ.க்களும் அளித்துள்ளனர்.