ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேஷியாவின் பண்டா கடற்கரை பகுதியில் இன்று திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை.
கிழக்கு இந்தோனேஷியாவின் பண்டா கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பப்புவா மாகாணம், அபேபுரா நகருக்கு மேற்கே 240 கி.மீ. தொலைவில், உள்ளூர் நேரப்படி காலை 10.05 மணிக்கு 21 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேஷியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவானதாக அந்த மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 2,200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.