அரசு நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் முற்றுகையிட்டு பல்வேறு நலத்திட்டங்களில் லஞ்சம் பெற்ற பணத்தை திருப்பித்தரும்படி கேட்டு நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “பயனாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள். ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் 25 சதவீதம் வரை லஞ்சம் பெற்றதாக சிலர் கூறுகின்றனர். இதையெல்லாம் உடனே நிறுத்திவிடுங்கள். எனது கட்சியில் திருடர்களை வைத்திருக்க நான் விரும்பவில்லை. அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுத்தால், அவர்கள் வேறு ஏதேனும் ஒரு கட்சியில் சேருவார்கள். அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை." மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அரசு நலத்திட்ட உதவிகளுக்கு லஞ்சம் வாங்கிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியவர்கள் மீது இ.பி.கோ. 409 சட்டத்தின்கீழ் (நம்பிக்கை மோசடி) வழக்கு பதிவு செய்யப்படும். இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அல்லது அபராதம் அல்லாத 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.