காதல் விவகாரத்தில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் வினோத் போலீஸில் சரண்

மேட்டுப்பாளையத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த கனகராஜ் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த
காதல் விவகாரத்தில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் வினோத் போலீஸில் சரண்

கோவை: மேட்டுப்பாளையத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த கனகராஜ் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த அவரது அண்ணன் வினோத்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், ஸ்ரீரங்கராயன் ஓடைப் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் கனகராஜ் (22). இவரது அண்ணன் வினோத்குமார் (24), தம்பி கார்த்தி. இவர்கள் மூவரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள். 

 இந்நிலையில் கனகராஜ், வெள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகள் வர்ஷினி பிரியா (16) என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கனகராஜ், வர்ஷினி பிரியாவை திருமணம் செய்து கொள்ள இருவரது வீட்டிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனராம்.

 இந்நிலையில் கடந்த வாரம் பெண்ணின் வீட்டில் இவர்களின் காதல் விவகாரத்தால் தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வர்ஷினி பிரியா கனகராஜ் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கனகராஜன் குடும்பத்தினர் வர்ஷினி பிரியாவை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வந்தனராம்.

 ஆனால் அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டு வர்ஷினி பிரியா செவ்வாய்க்கிழமை கனகராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். கனகராஜின் அண்ணன் வினோத் குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வினோத்குமார் அரிவாளால் கனகராஜ், வர்ஷினி பிரியா ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  பலத்த காயமடைந்த வர்ஷினி பிரியாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து, வினோத்குமாரைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீஸார் அங்கு சென்று கனகராஜின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வர்ஷினி பிரியாவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வர்ஷினி பிரியா அனுப்பி வைக்கப்பட்டார்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து வினோத்குமாரை தேடி வந்தனர். 

 இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்ய முயன்ற தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் வினோத் போலீஸில் சரணடைந்துள்ளார்.

 வினோத் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மேட்டுப்பாளையம் போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com