வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் (எல்பிஜி) விலை ரூ.42.50-ம், மானிய விலை சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.2.08-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு உருளையின் விலை மாதம் தோறும்1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக குறைந்து வந்த நிலையில் இந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களாக விலை குறைவை சந்தித்து வந்த சமையல் எரிவாயு உருளைகள், நடப்பு ஆண்டில் முதல்முறையாக தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அதிகரித்து வரும் சந்தை விலைக்கு ஏற்ப வரியும் உயர்த்தப்பட்டுள்ளது; இதன் விளைவாக சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலையின் அடிப்படையில், தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.495.61ஆக உள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.701.50ஆக உள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்தது.
குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில் அளிக்கப்படுகின்றன. அதாவது வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் முதலில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். பிறகு மானியத் தொகை, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 12 எண்ணிக்கைக்கு மேல் சமையல் எரிவாயு உருளை வாங்குவோருக்கு சந்தை விலையிலேயே அவை அளிக்கப்படும். மானியத் தொகை வரவு வைக்கப்பட மாட்டாது.
கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி மானிய விலை சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.6.52 காசுகளும், ஜனவரி 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.5.91 காசுகளும் குறைக்கப்பட்டன. இதேபோல், டிசம்பர் 1 ஆம் தேதி மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.133, ஜனவரி 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.120.50 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.