நாளை அரவக்குறிச்சியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் திட்டமிட்டப்படி கமல் பங்கேற்கிறார் என மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனக் குறிப்பிட்டுப் பேசியதாக கூறப்படும் பேச்சானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திலும் பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் புதியம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மு.காந்தியை ஆதரித்து கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைனிடையே கொடைக்கானலில் கமல் தங்கியுள்ள விடுதியை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கும் 2வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்து பயங்கரவாதம் என்ற சர்ச்சை பேச்சு காரணமாக கடந்த 2 நாட்களாக தனது பிரசாரத்தை ரத்து செய்திருந்த கமல், இன்று திட்டமிட்டப்படி திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்ய உள்ளதை அடுத்து தற்போது கொடைக்கானலில் இருந்து மதுரை வந்துள்ள கமல், இன்று திருப்பரங்குன்றத்தில் தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் கமல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இந்நிலையில், நாளை அரவக்குறிச்சியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்கிறார் என மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.