தில்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்து வரும் 19 ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், வரும் 23 ஆம் தேதி மாலை தில்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சியினருக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.