புது தில்லி: ஒவ்வொரு திட்டமும் நாட்டின் கடைக்கோடி குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்று தங்களது கூட்டணி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவுரையாக வழங்கியுள்ளார் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்களின் கூட்டம் தில்லியில் இன்று மாலை நடைபெற்றது. இதில் பாஜக மக்களவைத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மக்களவைத் தலைவராக மோடியை அகாலிதள கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் முன்மொழிந்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் உள்ளிடோர் வழி மொழிந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒருமனதாக மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவைத் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பின்னர் மோடி, மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
இதனையடுத்து, இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு தனது உரையை தொடங்கிய மோடி, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து சில அறிவுரைகளை வழங்கி பேசினார்.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வரலாற்று வெற்றியை கொடுத்துள்ளனர். ஒருங்கிணைந்து செயல்படுவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணம். விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. சுதந்திர இந்தியாவில் அதிக பெண் எம்.பி.க்கள் இந்த மக்களவையில் தான் உள்ளனர். பிராந்திய நலன், தேசத்தின் எதிர்பார்ப்பு இரண்டிலும் சமரசம் செய்து கொண்டது இல்லை.
யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம், மாற்றுவோம்.
அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம்.
அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உரிய இலாகா வழங்கப்படும். அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்பாதீர்கள். விஐபி கலாச்சாரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
உங்கள் தொகுதி மட்டுமின்றி தேசிய அளவில் பார்வை இருக்க வேண்டும். ஒவ்வொரு திட்டமும் நாட்டின் கடைக்கோடி குடிமகனையும் சென்றடைய வேண்டும். சேவையை தொடரும் போது மக்களின் ஆசீர்வாதம் தானாகவே கிடைக்கும் என்று கூறினார்.