புதுதில்லி: மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 9 மில்லியனாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் கட்சியன் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சோனியா பேசுகையில், மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்து உள்ளது. ஆனால் அதற்கான விரிவான தீர்வை தேடாமல், தலைப்பு செய்திகளுக்கான நிகழ்சிகளில் பங்கேற்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் பிரதமர் மோடி. அதில் தனக்கான நேரத்தை செலவிட்டு வருகிறார்.
ஒரு குடிமகனாகவும், எதிர்க்கட்சி உறுப்பினராகவும், இந்திய பொருளாதாரத்தை முற்றுகையிடுவதைப் பார்ப்பது எனக்கு வேதனையளிக்கிறது.
இஸ்ரேலிய பெகாசஸ் மென்பொருளின் மூலம் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது உளவு நடவடிக்கைகள் நடந்துள்ளன என்பது சமீபத்திய அதிர்ச்சியூட்டும் செய்தியாக உள்ளது. இதிபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை மட்டுமல்லாமல், வெட்கக்கேடானவை என்றார்.
மேலும், மோடி அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முயற்சிக்காமல், தேவையற்ற ஜி.எஸ்.டி போன்ற சிலவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஜி.எஸ்.டி மக்களிடையே குழப்பத்தையும், அரசின் மீதான எதிர்ப்பையும் காட்டுவதாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி முதல் காலாண்டில் 5 சதவீதம் மட்டுமே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மற்றும் மோடி அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளால் கடந்த 6 ஆண்டுகளில் முன்பில்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை 9 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேலைவாய்ப்பின்மை போன்ற முக்கிய பிரச்னைகள் தீர்க்கப்படாத நிலையில் ஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் மேலும் பல இன்னல்களை தர வாய்ப்பு உள்ளதாக சோனியா குற்றம் சாட்டியுள்ளார்.