சென்னை: அயோத்தி வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து வரும் 10 ஆம் தேதி முதல் காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தொடா்ந்து 40 நாள்களாக விசாரித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக காவல்துறை டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்துதல் மற்றும் அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மாநில சட்டம், ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு வரும் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.