சென்னை: மத்தியில் உள்ள பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனை தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஆயத்தமான நிலையில், திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதல்வர் பட்னாவிஸ் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்பு தினமான இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினமான இன்று, சட்ட நெறிமுறைகளில் தளராத நம்பிக்கை கொண்டோர் எதிர்பார்த்த வண்ணம், சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.
ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும், கட்சி அரசியல் லாப நோக்கத்துடன், விபரீத விளையாட்டு நடத்தும் மத்தியில் உள்ள பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என கூறியுள்ளார்.