கன மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. இன்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருவம் நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.