வாஷிங்டன்: சோமாலியாவில் அமெரிக்க ராணுவ தளம் மீது நடந்த தாக்குதலுக்கு பழிக்கு பழியாக அல் ஷபாப் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
சோமாலியா நாட்டின் பேல்டோக்லே நகரில் அமெரிக்க ராணுவத்தின் படை தளம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வந்த அல் ஷபாப் பயங்கரவாதிகள் கொண்ட குழு ஒன்று வாகனம் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நேற்று வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியது.
பழிக்கு பழி: அடுத்த சில மணி நேரங்களுக்கு பின்னர் இதற்கு பழிக்கு பழியாக மற்றும் தற்காப்புக்காக அமெரிக்க ராணுவம், அல் ஷபாப் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு 2 சிறிய ஆயதத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த வான்வழித் தாக்குதல்களில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், வாகனம் ஒன்றும் அழிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க ராணுவம் நேற்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
"இந்த தாக்குதல் பயனற்றது என்றாலும், அமெரிக்கர்கள், எங்கள் கூட்டாளிகள் மீது மற்றும் பிராந்தியத்தில் உள்ள நலன்களுக்கான நேரடி அச்சுறுத்தலை அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நிரூபிக்கிறது" என்று அமெரிக்க ஆப்பிரிக்கா கட்டளை செயல்பாட்டு இயக்குநர் வில்லியம் கெய்லர் கூறினார்.
மேலும், இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்களுக்கு சோமாலிய அரசாங்கமும், சர்வதேச பயங்கரவாத கூட்டாளிகளும் இந்த பயங்கரவாத இயக்கத்துக்கு செலுத்தும் அழுத்தத்தை சமரசம் செய்யதுகொள்ள முடியாது என்று கூறினார்.
இந்த தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதலில் பொதுமக்களுக்கு காயமோ அல்லது உயிரிழப்போ நிகழவில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.