புதுதில்லி: தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி பாங்காக் சென்று விட்டதாக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
இதற்கு முன்னரும் இதுபோல் அறிவிக்கப்படாத வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தற்போது எந்த நாட்டுக்கு சென்றுள்ளார்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ராகுல் காந்தி திடீரென்று வெளிநாடு சென்று விட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஜனநாயக மரபுகளின்படி, பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளது. ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எப்போதுமே மதிப்பளிக்கப்பட்டுள்ளது. தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தனிப்பட்ட பயணங்களையும்கூட பொதுவாழ்வின் ஒரு அங்கமாக சித்தரிக்க (சர்ச்சைய உருவாக்க) முற்படுபவர்கள், தனிநபர் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரணவ் ஜா தெரிவித்துள்ளார்.
இதேபோல், ’ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களை பொதுவாழ்வுடன் இணைத்து பார்க்க கூடாது’ என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் பாங்காக்கில் இருக்கிறார் என்ற தகவலை மறுத்துள்ள அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், அவர் புதன்கிழமை நாடு திரும்பி இரு மாநிலங்களிலும் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறிகிறார்கள்.