63 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த சீன பிரதமர் வரவேற்பு புத்தகத்தில் எழுதியது வாசகம் என்ன?

சென்னை மாகாண ஆளுநராக ஸ்ரீபிரகாசாவும், முதல்வராக காமராஜரும் இருந்தபோது 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்றைய சீன பிரதமர் சூ என்லாய் இரண்டு நாள் பயணமாக
Mahabalipuram
Mahabalipuram


சென்னை மாகாண ஆளுநராக ஸ்ரீபிரகாசாவும், முதல்வராக காமராஜரும் இருந்தபோது 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்றைய சீன பிரதமர் சூ என்லாய் இரண்டு நாள் பயணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சென்னை மாநகராட்சி மைதானத்தில் அதாவது இன்றைய நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இரண்டு நாள் பயணமாக வந்த சீன பிரதமர் சூ என்லாய், ஜெமினி ஸ்டியோவில் நடைபெற்ற படப்பிடிப்பை பார்த்து வியந்துபோனார். பின்னர் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை பார்வையிட்டார். அப்போது ரயில்பெட்டி தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு புத்தகத்தில் "இப்படி நவீனமாக ரயில் பெட்டி தயாரிப்பது சிறப்பாக உள்ளது. இந்தியா இதில் பெருமை கொள்ள வேண்டும்" என எழுதியிருந்தார். ஆளுநர் ஸ்ரீபிரகாசா இரவு விருந்து அளித்தார். அவருக்கு ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகத்தை வழங்கினார். 

இரண்டாவது நாள் இன்று ஈசிஆர் என்று அழைக்கப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் சென்று பல்லவர்களின் சிற்பங்களை கண்டு மகிழ்ந்தார். அவரிடம் மாமல்லபுரத்திற்கும், புத்தமதத்திற்கும் சீனாவில் உள்ள வரலாற்றுத் தகவல்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. அப்போது தனது உதவியாளரிடம் குறிப்பு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார். அங்கு உரையாற்றிய அவர், அனைத்து நாடுகளும் தங்களது திறன்களையும், தொழில்நுட்ப அறிவையும் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இதற்கு முன்னர் சீனாவின் வுஹான் மற்றும் கிங்க்டோ நகரங்களில் ஜீ ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஏற்பட்ட சுமுக சூழ்நிலையை முன்னெடுத்துச் செல்லுமாறும், எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும்  மோடி கேட்டுக்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக குறிப்பிட்ட மோடி, எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பான உயர்நிலைப் பேச்சுவார்த்தை நடத்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சீனாவுக்கு அனுப்பத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு சந்திப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்பதற்காக 63 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று இரண்டு நாள் பயணமாக இன்று வெள்ளிக்கிழமை சென்னை வருகை தருகின்ற சீன அதிபர் ஜிங்பிங், அன்றைய சீன அதிபர் சூஎன்லாய் வருகை தந்த அதே மாமல்லபுரத்தில் இரு நாட்டின் கலை, கலாசார நிகழ்வுகள் குறித்து கருத்துகளைப் பகிரும் இரு நாட்டுத் தலைவா்களும், நாளை சனிக்கிழமை நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய சந்திப்பில் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனா்.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள பிரதமா் மோடி - சீன அதிபா் ஜிங்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ள பல்வேறு அம்சங்கள் என்ன? 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீன இடையே கடும் வார்த்தை போர் நடுந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 

* இரு நாட்டு தலைவா்களின் இந்தச் சந்திப்பு அதிகாரப்பூா்வமற்ற, நட்பு ரீதியிலான சந்திப்பு என்பதால், குறிப்பிட்ட அம்சங்கள் என்றில்லாமல், இரு நாடுகளின் பொருதார மேம்பாட்டுக்கு உதவக் கூடிய பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பாக அமையும். அந்த வகையில், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாள் பிரச்னையாக இருந்த வரும் எல்லை பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகத்தில் உள்ள சிக்கல்களைக் குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம். 

* சென்னைக்கான ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் இந்திய ரயில்வேயில் சிக்னல் திட்டங்களை சீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம். 

* மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சீன ரயில் நிறுவனத்துடன் ரூ. 396 கோடி மதிப்பிலான அதிவேக புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், திட்டம் தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் எதுவும் இதுவரை போடப்படவில்லை, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில பாதுகாப்பு சிக்கல்களும் இந்தியாவுக்கு உள்ளன. இதுகுறித்து இரு நாட்டு தலைவா்களும் விரிவாக விவாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

* பயங்கரவாத பயிற்சி, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி, பயங்கரவாத குழுக்களுக்கு மற்ற உதவிகள் உள்ளிட்ட பயங்கரவாதம் தொடர்பான ஆலோசனை இந்த சந்திப்பின் போது முக்கிய அம்சமாக இடம்பெறலாம் என்றும், இந்திய-சீன எல்லைகள் தொடர்பான பேச்சுவார்த்தையும் இடம்பெறலாம் எனவும், அது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

* மோடி- ஜின்பிங் சந்திப்பிற்கு முன்பு, சீனாவில் ஜின்பிங்கை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்தியா - பாகிஸ்தான்  நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளார். இதனால் காஷ்மீர் விவாகரம் தொடா்பாக தவறான தகவல்களை சீனாவுக்கு பாகிஸ்தான் அளித்து வருவது குறித்த பேச்சும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

* காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வில் பாகிஸ்தான் எழுப்பிய போது, பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது. இது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடாகவே இருந்தது. இதனால் மோடி உடனான சந்திப்பின் போது ஜின்பிங், காஷ்மீர் பிரச்னை குறித்த பேச்சை தவிர்க்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

* மோடி-ஜின்பிங் சந்திப்பிற்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்திக்க போவதில்லை. இருப்பினும் இருநாட்டு அரசுத்துறை செய்தி தொடர்பாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து மோடி - ஜின்பிங் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

* மோடி-ஜின்பிங் சந்திப்பின் போது பாதுகாப்பு அதிகாரிகளும், மொழிபெயர்ப்பாளர்களும் மட்டுமே உடன் இருப்பார்கள். இவர்களின் சந்திப்பின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகாது எனவும், கூட்டறிக்கை ஏதும் வெளியிடப்படாது எனவும் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தமிழகத்தில் சீன நிறுவனங்கள் அதிகரிக்குமா? - தமிழகத்தின் தலைநகரான் சீர்மிகு சென்னைக்கு ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்பட்டுவதுண்டு. டெட்ராய்ட் என்பது அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். 

தமிழ்நாட்டில் லெனோவா மற்றும் ஹூவாய் போன்ற 12 முதல் 15 சீன நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சீன-இந்தியா தலைவர்களின் சந்திப்பால் தமிழகத்தில் சீன நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

மோடி - ஜிங்பிங் இடையேயான இந்த அதிகாரப்பூா்வமற்ற சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை

* ஜின்பிங்கிற்கு நினைவு பரிசு என்ன? - தமிழகம் வருகை தந்துள்ள சீன அதிபருக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நினைவுப்பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக கலை, பண்பாட்டுத் துறையினர், மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டட, சிற்பக் கலைக்கல்லுாரி வாயிலாக, கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு வடிவில், மரச்சிற்பங்கள் தயாரித்துள்ளனர். 

இதேபோல், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழக, பூம்புகார் நிறுவனம் சார்பில், நடராஜர், புத்தர் வடிவ, உலோக சிலைகள் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இவையும், சீன அதிபருக்கு நினைவு பரிசாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com