சென்னை: சுஜித், உன் உடலை குழியிலிருந்து எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம். எங்களை யார் எடுப்பது? என்று கண்ணீருடன் கேட்டுள்ளார் நடிகர் விவேக்.
மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் ஆழ்துளைக் கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் உடல் சிதைந்த நிலையில் தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டனர்.
சுஜித்தின் துயர முடிவை அறிந்து ஒட்டு மொத்த தமிழகமே அழுது கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் எப்போது முடிவு வரும். இன்னும் எத்தனை சுஜித்துகளை இந்த தேசம் பறி கொடுக்கப் போகிறது என்ற வேதனை அத்தனை பேரின் மனதையும் அரித்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
சுஜித்தின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது? என்று கண்ணீருடன் கேட்டுள்ளார்.
2010-இல் வந்த பலே பாண்டியா படத்தில் ஆழ் துளைக் கிணறு பற்றி, சொன்னேன். ஆனால் இன்று வரை அந்த மெத்தனம் அப்படியே இருப்பது மிக மிக வேதனையான அவலம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.