சென்னை: குமரி கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ‘மஹா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் பகுதியில் நிலவிவந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை பிற்பகல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை புயலாக மாறியது. இதற்கு ‘மஹா’ புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் லட்சத்தீவுகளை நோக்கி நகா்ந்து திருவனந்தபுரத்துக்கு வடமேற்கில் 320 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக மாறும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
குமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், டெல்டா மாவட்டங்கள், கடலூா், புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை மற்றும் மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மீனவா்கள் மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்தப்பட்டிருந்தன.
இதனிடையே கியார் மஹா புயல்கள் ஓமன் நாட்டை நோக்கி செல்வதாகவும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மஹா மற்றும் கியார் புயல்களின் நகர்வு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை அளவை பொறுத்து பள்ளி, கல்லுரிகளில் விடுமுறை குறித்த அறிப்பை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக முகாம்களில் தங்க வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மஹா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை. பொதுமக்கள் நீர்நிலைகளில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
உயிரிழப்பு இல்லாமல் பருவமழையை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று கூறினார்.