திருச்சி: தற்போது திமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்க தமிழ்செல்வன், இனிமேல் இரவு 11 மணிக்கு மேல் பேசாமல் இருப்பதை கடைபிடிக்க வேண்டும் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது தமிழகத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழிசை செளந்தரராஜனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் ஆளுநா் பதவி கெளரவமானது. அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் ஆளுநராக நியமிப்பது சரியான நடவடிக்கை இல்லை. தமிழிசை தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் நான் இதனை விமர்சிக்க விரும்ப வில்லை.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அதில் இந்தியாவில் பொருளாதாரம் கொஞ்சம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்தநிலையிலிருந்து நமது நாட்டை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாங்க என்று சொல்வது போல்தான் உள்ளது.
வங்கிகளை ஒன்றிணைப்பதில் தவறில்லை. அதேநேரத்தில் வங்கி ஊழியா்களுக்கு வேலையில்லாமல் செய்வதையும், புதிய வேலைவாய்ப்புகளை தடை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் நிர்வாகிகள், தொண்டர்கள் விழுந்து ஆசி பெற்றது அவர் மீது வைத்த மரியாதையும், இயற்கையானது. ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி காலில் சிலர் விழுவது செயற்கையானது என கூறினார்.
மேலும், அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந் தங்க தமிழ்செல்வனுக்கு தற்போது திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதிவி வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் இருக்கும் அவர் இனிமேல் இரவு 11 மணிக்கு மேல் பேசமால் இருப்பதை கடைபிடிக்க வேண்டும். அவர் இரவு 11 மணிக்கு மேல் பேசியதால்தான் அமமுகவில் பிரச்னை வந்தது என்று கூறினார் தினகரன்.