பெங்களூரு: கருப்புப் பண மோசடி வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரை அமலாக்கத் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் மூன்று பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசியுள்ளனர். இதையடுத்து, பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார், ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினர்.
இதே குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள கர்நாடக பவன் ஊழியர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நான்காவது முறையாக தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவகுமார் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, அவர் கைது செய்யப்பட்டார். அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டி இருப்பதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகுமார், தில்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. தற்போது சிவகுமார் கர்நாடகத்தின் கனகபுரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் மூன்று பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசியுள்ளனர். இதையடுத்து, பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக கர்நாடகா முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.