புதுதில்லி: முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், பிரபல மூத்த வழக்குரைஞருமான ராம் ஜெத்மலானி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், பிரபல மூத்த வழக்குரைஞருமான ராம் ஜெத்மலானி(95) வயது மூப்பும் மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.
அவரது மறைவுக்கு மூத்த தலைவர்களும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், அறிவாற்றலும், துணிச்சலும் மிக்க வழக்குரைஞரை நீதிமன்றம், நாடாளுமன்றமும் மற்றும் இந்திய பொதுமக்களும் இழந்துள்ளனர். அவர் நகைச்சுவையானவர், தைரியமானவர், எந்தவொரு விஷயத்திலும் தைரியமாக தன்னை வெளிப்படுத்துவதில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்லாதவர். அவரது மனம் பேசுவதை எந்த பயமும் இல்லாமல் அப்படியே தைரியமாக பேசுவதுதான் அவரிடம் கண்ட சிறந்த அம்சங்களில் ஒன்றால், தேவைப்படுபவர்களுக்கு உதவுவது அவரது ஆளுமையின் ஒரு பகுதி என ராம் ஜெத்மலானிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அவசர நிலை காலத்தில் பொது சுதந்திரத்திற்கான ராம் ஜெத்மலானியின் துணிச்சல், போராட்டம் நினைவில் கொள்ளப்படக் கூடியவை. ராம் ஜெத்மலானியுடன் தொடர்புகொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்திருந்தது எனது அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.
இந்த சோகமான தருணங்களில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ள மோடி, அவர் இங்கே இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் முன்னெடுத்து செய்த முன்னோடி செயல்கள் தொடர்ந்து நம்மோடு இருக்கும்! ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.