சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரபுகளுக்கு மாறாக மாற்றப்பட்டுள்ளார். அதனால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த கே.எஸ்.அழகிரி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் வருந்தத்தக்கது. இதே போல் சுயேச்சையான பல அமைப்புகளில் உள்ளவர்கள், அதிகாரிகள் பதவியை ராஜினமா செய்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரபுகளுக்கு மாறாக மாற்றப்பட்டுள்ளார். அதனால் அவர் ராஜினமா செய்துள்ளார்.
ஒரே நேரத்தில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் பல அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சென்றிருப்பதில் ஏதாவது காரணம் இருக்கலாம். ப.சிதம்பரம் கைது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸார் இரு பிரிவினராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. குடிமராமத்துப்பணியை விவசாயிகளே செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்துப்பணி ஒழுங்காக செய்யாததால் நாங்கள் அந்தப்பணியில் இறங்கியுள்ளோம். தமிழகத்தில் 28 ஏரிகளை தூர்வாரியுள்ளோம். தமிழகத்தில் சொல்லும்படி சட்டம் ஒழுங்கு இல்லை.
பாஜகவின் 100 நாள் ஆட்சியில் பரிதாபகரமான தோல்வியில் பொருளாதாரம், நிதித்துறை, தொழில்துறை, வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட துறைகள் சென்று கொண்டிருக்கின்றன. மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோய் உள்ளன.
நாட்டின் ஜிடிபி 9 சதவீதமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தற்போது அது 4 சதவீதம் குறைந்துள்ளது. இதை மறைக்க ஜாதி, மத, மொழி, கடவுள் ஆகியவற்றை மையமாக வைத்து அரசியல் செய்கின்றனர்.
சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தலித்துகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது தவறானது. கல்வித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் தலையீடு உள்ளது என்றார்.