தமிழக முதல்வர் வெளிநாடு சென்றிருப்பது வரவேற்கத்தக்கது என்று திருவாடானை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், நடிகருமான எஸ்.கருணாஸ் தெரிவித்தார்.
கமுதியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக பல முன்னணி தொழில் நிறுனங்களை அழைத்து வந்து முதலீட்டை கவர்வதற்காகவும் வெளிநாடு சென்றுள்ளனர். அது வரவேற்கத்தக்கது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் அரசியல் பின்னணி உள்ளது என்று வழக்கமாக எல்லோரும் சொல்வது தான். என்னை பொருத்தவரையில் விசாரணை நடக்கிறது. அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவது தான் நல்லது.
பொருளாதார வீழ்ச்சி பற்றி ப.சிதம்பரம் மட்டும் கவலைப்பட வேண்டியதில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பற்றி எல்லோரும் கவலைப்பட வேண்டும்.
இந்தாண்டு நடைபெற உள்ள பசும்பொன் தேவர் குருபூஜை விழாவுக்கு 144 தடையை நீக்க முதல்வரிடம் கோரிக்கை வைப்போம் என்றார்.