புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறிய இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்த பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் இந்திராணி அப்ரூவராக மாறினார். இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த 21-ஆம் தேதி கைது செய்தனர். அவரது கைதுக்கு இந்திராணியின் வாக்குமூலம் முக்கியக் காரணமாக அமைந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ஷீனா போரா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி, வழக்கு தொடர்பான விசாரணைக்காக தில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பி.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நல்ல செய்தியாகும். அவர் தற்போது அனைத்துப் பக்கங்களிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை நீதிமன்றம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ப. சிதமபரத்திடம் விசாரணைய தீவிரப்படுத்த, சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. இதனை தொடர்ந்து, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறிய இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு சிறப்பு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து மும்பை உள்ள பைகுல்லா சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.