புதுதில்லி: போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், கடந்த 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
சாலை விதிமீறலில் ஈடுபடுவோரை கண்டறிய நவீன தொழில்நுட்பக் கருவிகள் கொண்டுவரப்பட்டாலும், அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் அபராதம் வசூலிக்க முடியாமல் போக்குவரத்துத் துறை போலீஸார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது விதிக்கப்படும் கடுமையான அபராதம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை. விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது. அபராதம் வசூலிப்பது விபத்துகளில் இருந்து உயிர்களை காக்கத்தானே தவிர, அரசின் வருமானத்தை அதிகரிக்க கிடையாது.
போக்குவரத்து விதிமீறலுக்கான கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்காலம் என கூறினார்.
மும்பையில் பாந்த்ரா-வோர்லி கடல்வழி பாலத்தில் காரில் வேகமாக சென்றதற்காக நான் கூட அபராதம் செலுத்தியுள்ளேன். அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இதனால், லஞ்சம் அதிகரிக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.