புதுதில்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக்அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுகவின் அண்ணா மாநாட்டில் பங்கேற்க்க ஃபரூக் அப்துல்லா உள்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டதாகவும், தற்போது, காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலால் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வைகோ தரப்பிலான முறையீட்டை கேட்ட நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி அமர்வில் முறையிடுமாறு வைகோ தரப்புக்கு அறிவுறுத்தினார்.