இந்தியாவிற்கு பல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி என்று அமித்ஷா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரிகின்றனர். மேலும் அமித்ஷாவின் கருத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என டிவிட்டரில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்க பதிவில், ''இந்தியாவில் உள்ள ஒரியா, மராத்தி, கன்னடா, தமிழ், ஆங்கிலம், குஜராத்தி, பெங்காலி, உருது, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளை குறிப்பிட்டு இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல'' என பதவிட்டுள்ளார்.