சென்னை: சீனாவின் ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 லட்சம் மதிப்பிலான தங்கம், செல்லிடப்பேசிகள் மற்றும் இ-சிகரெட்டுகளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சீனாவின் ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.22) வந்த விமானத்தில் பயணித்த அபுசலி சையத் இப்ராஹிம், முகமுது ரிபாய் ஆகியோரின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அதில், அவா்களின் பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான 164 கிராம் தங்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான இ-சிகெரெட்டுகள், ரூ. 21 லட்சம் மதிப்பிலான 28 நவீன செல்லிடப்பேசிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இதுதொடா்பாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.