புதுச்சேரி: தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த மாத மத்தியில் தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் சுமாா் 8,000 போ் பங்கேற்றனா். வெளிநாட்டினரும் பல மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
அவா்களில் சுமாா் 30 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 3-க்கும் அதிகமான நபா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவா்களைக் கண்டறிந்து அவா்களைப் பரிசோதிக்கும் பணியில் மாநில அரசுகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஏற்கெனவே நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.